சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.
** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர்.
** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர்.
** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.
** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது.
** நம்கதை முடிந்து விட்டது.
** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார்.
** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம்.
மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.
இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்.
“ …. And We have sent down to thee (O Muhammad) the Book (i.e., the Qur’an) which explains all things...”
(Qur’an, al-Nahl, 16:89)
குர்ஆன் எனும் இந்த புத்தகத்தில் அனைத்தையும் விளக்கியுள்ளோம் என்று அல்லாஹ் குர்ஆன் 16:89 வசனத்தில் கூறுகிறான், அதனால் ஜெருஸலத்தைப்பற்றியும் அல்லாஹ் விளக்கியிருப்பான். அதைத்தேடி கண்டுபிடித்து விளக்கம் தரப்போகிறேன் என்று தனது கருத்தை துவக்குகிறார்.
சில வசனங்களுக்கு தனது
சுய கருத்துக்களைக் கொண்டு மொழிபெயர்த்திருப்பதாகவும், அந்த விளக்கங்கள் அல்லாஹ்வினாலோ அல்லது அவனது தூதரினாலோ நேரடியாக சொல்லப்பட்டவை அல்ல என்றும் கூறுகிறார். தான் கொடுப்பதுபோன்ற சுய விளக்கங்களை கொடுக்கக் கூடாது என்பவர்களும் பல வசனங்களுக்கு தங்களின் சுய கருத்துக்களை கூறுபவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.
அதனால், தன்னுடைய விளக்கத்தை மறுப்பவர்கள் புனித பூமியான ஜெருஸலத்திற்கு யூதர்கள் திரும்பியதை குர்ஆன் வசனங்களைக் கொண்டு விளக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார்.
இதுபோன்ற சவால்கள் மார்க்க விஷயங்களில் நன்மை பயக்காது.
என் கேள்விக்கு உன்னிடம் பதில் இல்லையென்றால் நான் சொல்வதுதான் சரி என்று வாதிடும் தன்மை மார்க்கத்திற்கு உகந்தது அல்ல.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிய முயல்வோம்.
குர்ஆனில் வெறும் எழுத்துக்களை மட்டும் கொண்டு தொடங்கும் அத்தியாயங்கள் இருக்கின்றன.
الم
அலிஃப், லாம், மீம். (2:1)
المص
அலிஃப், லாம், மீம், ஸாத். (7:1)
போன்ற வசனங்களின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க பல காலமாக பலரும் முயன்று வருகிறார்கள். இதற்கான விளக்கம் என்னவென்று அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருக்காத நிலையில் நல்ல விளக்கமாக கருதும் ஒன்றை நாம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில், பத்தொன்பது என்ற எண்ணைக் கொண்டு குர்ஆனின் கட்டமைப்பை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய ரசாது கலீபா தன்னுடைய முக்கியமான ஆதாரமாக வைத்தது மேற்கண்ட வசனங்களைத்தான். அர்த்தமே இல்லாத எழுத்துக்களை குர்ஆனில் வைக்க வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லையென்றும், அந்த எழுத்துக்கள் பத்தொன்பது என்ற கட்டமைப்பில் குர்ஆன் இருப்பதை உறுதிபடுத்துகிறது என்றும் கூறி அந்த வசனங்களில் தன்னுடைய கருத்தை திணித்த ரசாது கலீபாவின் செயலுக்கு ஒத்ததாகவே இம்ரான் ஹுஸைனின் சவாலும் பார்க்கப்படும்.
அந்த எழுத்துக்களுக்கு நான் கூறும் சுய விளக்கத்தை மறுப்பவர்கள் சரியான விளக்கத்தை கூற வேண்டும் என்ற ரசாதுகலீபாவின் சவாலுக்கு நம்மிடம் பதிலில்லை. நம்மிடம் பதிலில்லாததால் ரசாது கலீபாவின் விளக்கம் சரியானது ஆகிவிடும் என்று கருதுவது எத்தகைய விளைவை ஏற்படுத்துமோ அத்தகைய விளைவைத்தான் இம்ரான் ஹுஸைனின் சவால் விளைவிக்கிறது.
இம்ரான் ஹுஸைன் விரிக்கும் சவால் வலையில் நாம் சிக்கினால் நம்மை நாமே கூட மீட்க இயலாது. அதனால், இம்ரான் ஹுஸைனின் கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே சென்று அந்த வலையை அறுப்போம்.
இம்ரான் ஹுஸைன் தன்னுடைய சுய விளக்கம் என்று சொல்லும் கருத்துக்களை அவர் பிறப்பதற்கு முன்பே அந்த சிந்தனைக்கு விதை விதைத்தவர் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் ஆவார்.
குர்ஆனின் வார்த்தைகளை கவிதைகளுக்கு இடையில் இணைத்து கவிதையை அழகுபடுத்துவதில் வல்லவரான கவிஞர் இக்பால், 1924 ஆம் ஆண்டு "பேங் இ தரா"(بان٘گِ دَرا) என்ற ஒரு கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றிருந்த ஒரு கவிதைத்துண்டுதான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
"کھُل گئے، یاجوج اور ماجوج کے لشکر تمام
چشمِ مسلم دیکھ لے تفسیرِ حرفِ ’یَنْسِلُوْنْ‘"
"Khul gayay y’ajuj aur m’ajuj ka lashkar tamam, Chashmay Muslim dekhlay tafseer harf-e-yansiloon"
"யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் திறந்துவிடப்பட்டுவிட்டனர், யன்சிலூன் (یَنْسِلُوْنْ) என்ற வார்த்தையின் விளக்கத்தை முஸ்லிம்கள் காணட்டும்" என்பதுதான் இந்த கவிதைத்துண்டின் அர்த்தம்.
அது என்ன வார்த்தை யன்ஸிலூன் (یَنْسِلُوْنْ) ?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Part -3
https://piraimeeran.blogspot.com/2020/07/SM3.html?m=1
Part -1
https://piraimeeran.blogspot.com/2020/07/SM1.html?m=1
Part -3
https://piraimeeran.blogspot.com/2020/07/SM3.html?m=1
Part -1
https://piraimeeran.blogspot.com/2020/07/SM1.html?m=1