Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -4)

சூப்பர் முஸ்லிம் சேனலின் முகப்பில் ஒருபுறம் இம்ரான் ஹுஸைனின் புகைப்படமும் மறுபுறம் மௌலானா மௌதூதி அவர்களின் புகைப்படமும் இருக்கிறது. 

மௌலானா மௌதூதி அவர்கள் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றவர். அவருடைய குர்ஆன் உருது மொழிபெயர்ப்பை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டதே அவர் மீதான நன்மதிப்பிற்கு ஒரு சான்றுதான். 

அத்தகைய நன்மதிப்பு பெற்றவரின் புகைப்படத்தை தனது முன்பக்கத்தின் வைப்பதன் மூலம் வழிதவறிய கூட்டத்தினர் தாம் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று சூப்பர் முஸ்லிம் சேனல் எண்ணுகிறதுபோலும்!. 

எத்தகைய நல்லவராக இருந்தாலும் மனிதர் என்ற முறையில்  தடுமாற்றங்கள் இருக்கத்தான் செயகின்றன. வரலாற்று ரீதியிலான தடுமாற்றத்திற்கு உள்ளாகி ஒரு புதுவிஷயத்தை மௌலானா மௌதூதி அவர்கள் அறிமுகம் செய்தார். 

கஃஹ்ப் அத்தியாயத்தின் 83 வது வசனத்தில் இடம்பெறும் துல்கர்னைன் என்பவரைப் பற்றின புதுவிஷயத்தை பற்றவைத்தார் மௌலானா மௌதூதி. 

குர்ஆனில் கூறப்படும் துர்கர்னைன் யார் என்பதை கண்டுபிடிக்க பல காலங்களாக பலரும் முயன்று வருகின்றனர். அந்த துல்கர்னைன் பாரசீக மன்னர் "சைரஸ்" (Cyrus the great) தான் என்று அறிவித்தார் மௌலானா மௌதூதி. 

மௌதூதி அவர்களின் இந்த கருத்து அவருடைய சுயகருத்து அல்ல. அவர் இந்த கருத்தை வெளியிடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர்  ஜெர்மனைச் சேர்ந்த Redslob என்பவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். பைபிள் மற்றும் குர்ஆனை ஒப்பிட்டு இந்த முடிவை அவர் அறிவித்திருந்தார். யூத கிறஸ்தவ (judo xtian) நம்பிக்கைகளை உள்வாங்கி அவற்றை குர்ஆனுடன் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு அவர் வந்திருந்தார். 
இது முஸ்லிம்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், மௌதூதி அவர்கள் இந்த கருத்தை பிரச்சாரம் செய்யத்தொடங்கியபின்னர் இதன் தாக்கம் முஸ்லிம்களிடமும் தெரிய ஆரம்பித்தது. குர்ஆன் கூறும் துர்கர்னைன் என்பது சைரஸ் மன்னர்தான் என்ற எண்ணம் உருது பேசும் முஸ்லிம்களிடத்தில் ஏற்பட ஆரம்பித்தது. 

சைரஸ் மன்னர்தான் துல்கர்னைன் என்ற கருத்தில் மௌதூதி அவர்கள் உறுதியாக இல்லாவிட்டாலும் ஒரு நல்ல நோக்கத்திற்காகத்தான் அதை உறுதியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அது என்ன நல்ல நோக்கம்? 

ஆரம்பகாலத்தில் அலெக்ஸான்டர் எனும் அரசர்தான் துல்கர்னைன் என முஸ்லிம் அறிஞர்கள் சிலர் நம்பினர். இப்னு இஷாக் மற்றும் இப்னு ஹிஸான் போன்ற தொடக்ககால அறிஞர்கள் கூட துல்கர்னைன் என்பது அலெக்ஸான்டர்தான் என்று நம்பினர். 

பல நூற்றாண்டுகளாக அந்த நம்பிக்கை நீடித்து வந்த நிலையில்தான், துல்கர்னைன் என்பது பாரசீக மன்னர் "சைரஸ்"தான் என்ற கருத்து எழுப்பப்பட்டது. இந்த கருத்து சீண்டப்படாமல் இருந்தது. 

இந்நிலையில்தான், இறைமறுப்பாளனான அலெக்ஸான்டரை இறை நம்பிக்கையாளரான துல்கர்னைனுடன் எப்படி ஒப்பிட முடியும் என்று கேள்வியெழுப்பினார் மௌதூதி. துல்கர்னைன் என்பவர் சைரஸ் என்று நம்புவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்தார். சைரஸ்தான் துல்கர்னைன் என்று பிரச்சாரமும் செய்தார். 

ஒருவரை துல்கர்னைன் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவருக்கு நான்கு விஷயங்கள் பொருந்திப்போக வேண்டும் என்று கூறி அவர் நான்கு விஷயங்களை முன்வைத்தார். ஒரு வரலாற்றின் அடிப்படையில்தான் அவை இருந்தன. 

நபி(ஸல்) அவர்களை பொய்படுத்துவதற்காக யூதர்களின் உதவியை மக்கா காபிர்கள் நாடினர். மூன்று கேள்விகளை கொடுத்து இவற்றிற்கான பதிலை இறைத்தூதரால் மட்டுமே சொல்ல முடியும் என்று மக்கா காபிர்களிடம் யூதர்கள் கூறினர். உயிர்(ரூஹ்) பற்றிய கேள்வி, குகைவாசிகள் பற்றிய கேள்வி மற்றும் துல்கர்னைன் பற்றிய கேள்வி என மூன்று கேள்விகள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதிலும் வஹியில் வந்தது. இந்த உண்மை வரலாற்றின் அடிப்படையில்தான் மௌதூதி அவர்கள் துல்கர்னைன் என்பவருக்கு இருக்க வேண்டிய நான்கு விஷயங்களை முன்வைத்தார். 

(1) துல்கர்னைன் என்பவரைப் பற்றி யூதர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரைப் பற்றி கேட்டிருக்கிறார்கள் என்றார் மௌதூதி. துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளுடையவர் என்று நேரடி அர்த்தம் கிடைத்தாலும் இரண்டு பேரரசின் ஆட்சியாளராக இருந்ததைக் குறிக்கும் என்றார். 

(2) துல்கர்னைன் மிகப்பெரிய அரசராக இருக்க வேண்டும் என்றார்

(3) துல்கர்னைன் என்று நாம் கூறுபவர் இறை நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்றார். 

(4) தடுப்புச் சுவர் கட்டியவராக இருக்க வேண்டும் என்றார். (துல்கர்னைன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை தடுத்து சுவர் எழுப்பியவர்)

இந்த நான்கு விஷயங்களும் சைரஸ் மன்னருக்கு பொருந்திப்போவதை பைபிள் மற்றும் குரானை ஒப்பிட்டு நிறுவினார். 

(1) பைபிள் கூற்றின்படி, டேனியல் என்பவர் கனவில் கண்ட இரண்டு கொம்புகள் உடைய கடா ஆடு என்பது Media and Persia என இரண்டு பேரரசுகளை ஆட்சி செய்த சைரஸை குறிக்கிறது என்றும், அவர் மீது யூதர்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர் என்றும் கூறினார் மௌதூதி. அதனால் சைரஸ் மன்னர் யூதர்களுக்கு தெரிந்த ஒருவர் என்ற முடிவுக்கு வந்தார்.

(2) பைபிள் கூறும் அவர், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஆட்சிசெய்தவர். வடக்கு தெற்கு பகுதிகளை முழுமையாக ஆட்சி செய்தாரா என்பது தெரியவில்லை என்றாலும் சைரஸ் ஒரு பேரரசர் என்பதுதான் சரியானது என்றார் மௌதூதி. 

(3) நீதி நேர்மைக்காக எதிரிகளால் கூட புகழப்பட்ட சைரஸ் மன்னர் ஒரு இறை நம்பிக்கையாளர் என்றார் மௌதூதி. 

(4) கொக்காஸியா (caucasia) எனும் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பனை (சுவர்) சைரஸ் கட்டியதுதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், யஃஜுஜ் மஃஜூஜ் கூட்டத்தார் மத்திய ஆசியாவில் உள்ள தாத்தாரியார் மற்றும் மங்கோலியர்கள் என்று சொல்லப்படுவதால் அந்த தடுப்புச்சுவர் சைரஸ் கட்டியதாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகிறார்.

துல்கர்னைன் என்பவருக்கு பொருந்திப்போக வேண்டிய நான்கு விஷயங்களை மௌதூதி அவர்களே உருவாக்கி வைத்துவிட்டு அதை சைரஸ் மன்னருக்கு முழுமையாக பொருத்தமுடியாமல் போகும் நிலையிலும் துல்கர்னைன் என்பது சைரஸ் மன்னர்தான் என்று மௌதூதி அவர்கள் வாதிப்பது அர்த்தமே இல்லாதது. ஆயினும், அலெக்ஸான்டரை மறுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக சைரஸை துல்கர்னன் என்று பிரச்சாரம் செய்தார் மௌதூதி. 

துல்கர்னைன் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்காத நிலையில் அவர் யாரென்று கண்டுபிடிக்க வேண்டியத் தேவை ஏதும் இஸ்லாத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி வைத்துக்கொண்டு அதில் அவர்களே முரண்படும் நிலைதான் துல்கர்னைன் விஷயத்தில் நிகழ்கிறது. 

துல்கர்னைன் யாரென்று கண்டுபிடிப்பது மார்க்கமல்ல. 

வரக்கூடிய காலங்களில் இன்னும் பல துல்கர்னைன்கள் வரக்கூடும். அப்படி வந்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. 

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

மௌலானா மௌதூதி அவர்களின் இந்த ஆய்வு தேவையே இல்லாதது. தேவையில்லாத இந்த ஆய்வையும், கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிவைத்திருந்த தேவையில்லாத கவிதை வரிகளையும் வைத்து முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையேயில்லாத ஒரு ஆய்வை செய்வதற்கு கரீபியன் தீவுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு படிக்க வந்தார் இம்ரான் ஹுஸைன். இவர்தான் சூப்பர் முஸ்லிம் சேனலின் உயிர்நாடி. இவருடைய கருத்துக்கள்தான் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சூப்பர் முஸ்லிம் சேனலில் ஒளிபரப்பாகிறது. 

யார் இந்த இம்ரான் ஹுஸைன்? 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Part -5
https://piraimeeran.blogspot.com/2020/07/SM5.html?m=1


Part -3

https://piraimeeran.blogspot.com/2020/07/SM3.html?m=1



Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி