*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -1)
ஸம்ஸம்!
மக்காவில் காபா எனும் இறையில்லத்தின் அருகாமையில் அமையப்பெற்றிருக்கும் ஒரு கிணற்றின் பெயர்தான் ஸம்ஸம். அந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரானது 'ஸம்ஸம் நீர்' என அழைக்கப்படுகிறது.
ஸம்ஸம் கிணறு தோன்றிய விதம் அற்புதம் (Miracle) என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஸம்ஸம் கிணறு மற்றும் ஸம்ஸம் நீர் ஆகிய இரண்டும் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி அல்லாஹ்வின் அருள் நிறைந்தவை. இந்த நம்பிக்கைக்கு காரணம், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை உயர்வாக கூறியிருப்பதுதான்.
** ஸம்ஸம் நீர் பூமியிலேயே சிறந்த நீராகும்
** ஸம்ஸம் நீர் பரக்கத் நிறைந்ததாகும்
** ஸம்ஸம் நீர் பானமும் உணவுமாகும்
**ஸம்ஸம் நீர் நோய் நிவாரணியாகும்
** ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அதற்கானதாகதாகும்
என்றெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி ஸம்ஸம் நீர் மதிப்புமிக்கது. அதனால்தான், ஸம்ஸம் நீர் முஸ்லிம்களிடையே மதிப்பு மிக்க ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்களிடம் இருக்கும் தங்கம் வெள்ளி போன்றவற்றை பாதுகாப்பதுபோல் அவர்களுக்கு கிடைக்கும் ஸம்ஸம் நீரையும் பாதுகாத்துவைத்து நீண்ட காலத்திற்கு அருந்துவது முஸ்லிம்களிடையே காலம்காலமாக இருந்து வருகிறது.
ஸம்ஸம் கிணற்றில் இருந்து எவ்வளவு அள்ளினாலும் குறையாத வகையில் அதிசயமான முறையில் வந்து கொண்டிருக்கும் ஸம்ஸம் நீரானது கெட்டுப்போகாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
எந்த நீரையும் வருடக்கணக்கில் வைத்து எவரும் பருகுவதில்லை. ஆனால், ஸம்ஸம் நீரை மட்டும் பாதுகாத்து பல வருடங்கள் கடந்தும் முஸ்லிம்கள் பருகிவருகின்றனர். இதற்குக் காரணம் ஸம்ஸம் நீர் கெட்டுப்போகாத அற்புத நீர் என்று முஸ்லிம்கள் நம்புவதுதான்.
மதங்களின் நம்பிக்கைகள் அறிவியல் கொண்டு ஆட்டம்காண வைக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸம்ஸம் தொடர்பான நம்பிக்கைகளையும் அறிவியல் அசைத்துப் பார்த்தது. அப்போதிலிருந்து அறிவியல் மூலம் ஸம்ஸம் சோதனைகளை சந்திப்பதும் அதே அறிவியலைக் கொண்டு ஸம்ஸம் நம்பிக்கைகள் மேம்படுத்தப்படுவதும் ஆரம்பமாகியது.
ஸம்ஸம் அற்புதமா? அறிவியலா? எனும் பட்டிமன்றம் தொடங்கியது.
ஸம்ஸம் தொடர்பான தவறான நம்பிக்கைகளும் முஸ்லிம்களிடையே ஊன்றத் தொடங்கியது.
இது தொடர்பாக விரிவாக பார்ப்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.