*அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part -1)
தமிழ் மொழியில் ஒரு மனிதன் சக மனிதனை 'அவன்' என்று விளிப்பது மரியாதை குறைவானதாக கருதப்படுகிறது.
'அவன்' எனும் அத்தகைய மரியாதை குறைவான வார்த்தையை
தமிழ்பேசும் முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு கொடுப்பது ஏன்?
'அவர்' என்று அல்லாஹ்வை அழைத்தால் மரியாதையாக இருக்குமே! என்று தமிழுலகில் கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழ் உலகத்தில் கேட்கப்படும்இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக மேற்குலகில் கேட்கப்படும் வேறொரு கேள்விக்கு பதில் தேடுவோம்.
அல்லாஹ் ஆணுமில்லை! பெண்ணுமில்லை!. அப்படியென்றால் அல்லாஹ்வை ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன்? என்பதுதான் மேற்குலகின் கேள்வி.
இந்த கேள்விக்கான பதிலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் உலகின் கேள்விக்கு தெளிவான பதிலை நாம் புரியமுடியும்.
'அல்லாஹ்' (اللَّهُ) என்ற அரபு வார்த்தைக்கு 'ஹுவ' (هُوَ) என்ற அரபு பிரதிபெயர் கொடுக்கப்படுவது உண்மைதான். அதாவது, அரபு மொழியில் ஓர் ஆண் அழைக்கப்படுவது போலவே அல்லாஹ்வும் அழைக்கப்படுவது உண்மைதான்.
ஆனால், இது ஆண்களை அழைக்கும் ஆண்பால் அல்ல.
இதை புரிந்து கொள்வதற்கு மொழிகள் பற்றின அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
உலகில் உள்ள மொழிகளில் மனிதர்களை ஒருவிதமாகவும் மனிதர் அல்லாதவற்றை வேறுவிதமாகவும் அழைப்பது இருக்கிறது. மனிதரை அழைப்பதை 'உயர்திணை' என்றும் மனிதரல்லாதவற்றை 'அஃறிணை' என்றும் பிரிப்பர்.
மனிதன் - உயர்திணை
விலங்கு, மரம், பறவை, பூச்சி, தாவரம்... - அஃறிணை
உயர்திணையை ஆண்பால் மற்றும் பெண்பால் என்று இரண்டாக அடையாளப்படுத்துவர்.
பிறப்பினால் ஆணாக அடையாளம் காணப்பட்டவரின் செயல்கள் அவன் எனும் ஆண்பால் வார்த்தையாலும், பிறப்பினால் பெண்ணாக அடையாளம் காணப்பட்டவரின் செயல்கள் அவள் எனும்
பெண்பால் வார்த்தையாலும் குறிப்பிடப்படும்.
(இந்த உயர்திணையில் பெண்பாலினை விட ஆண்பால் உயர்வானதாக கருதப்படும்)
அஃறிணையைப் பொறுத்தவரைக்கும் ஆணா அல்லது பெண்ணா என்று தனியாக குறிப்பிடுவதில்லை. அதனால், 'அது' எனும் ஒரே வார்த்தையாலேயே குறிப்பிடப்படும்.
** உயர்திணை - அவன், அவள்
** அஃறிணை - அது
¶¶ அன்வர் ஒரு சிறுவன். 'அவன்' பள்ளிக்கூடம் செல்கிறான்.
¶¶ ஆயிஷா ஒரு சிறுமி. 'அவள்' பள்ளிக்கூடம் செல்கிறாள்.
¶¶ சிங்கம் ஒரு மிருகம். 'அது' வேட்டையாடும்.
அஃறிணையை குறிக்க அது என்ற சொல் பயன்படுத்தப்படுவதுபோல்
சில மொழிகளில் தனி வார்த்தை இருக்கிறது. சில மொழிகளில் தனிவார்த்தை இல்லை.
** தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உயர்திணையை குறிக்க 'அவன்-He', 'அவள்-She' என்ற வார்த்தைகள் இருக்கின்றன.
** அதேபோல, அஃறிணையை குறிக்க 'அது-It' என்ற வார்த்தைகள் இருக்கின்றன.
அரபு, ஹீப்ரு, பிரெஞ்ச் போன்ற மொழிகளில் உயர்திணையை குறிக்க வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அஃறிணையை குறிக்க வார்த்தை இல்லை.
அஃறிணையை குறிக்க தனி வார்த்தை இல்லை என்ற நிலையில் இந்த மொழிகளில் அஃறிணையை எப்படி குறிப்பது?
தனி வார்த்தை இல்லையெனில் இருக்கிறதை வச்சுதான் அஃறிணையை குறிக்க முடியும்.
அதுதான் செயய்யப்படுகிறது.
உயர்திணையை குறிக்க பயன்படும் அவன் மற்றும் அவள் ஆகிய இரண்டு வார்த்தையையும் வச்சுதான் அஃறிணையையும் குறிக்க முடியும்.
** சிங்கம் ஒரு மிருகம். அவன் வேட்டையாடுகிறான்.
(அல்லது)
** சிங்கம் ஒரு மிருகம். அவள் வேட்டையாடுகிறாள்.
இந்த இரண்டு விதமாகத்தான் சொல்ல முடியும்.
அஃறிணையை குறிக்க தனியாக வார்த்தை இல்லாத மொழிகளில் இதுதான் செய்யப்படுகிறது.
** சூரியன் ஒரு கோள், 'அது' கிழக்கில் உதிக்கிறது என்று தமிழில் சொல்கிறோம்.
** The sun is a planet, 'It' rises in the east என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
சூரியனை 'அது-It' என்ற அஃறிணையால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிக்கிறோம்.
அஃறிணை சொல் இல்லாத அரபு, ஹீப்ரு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் முதலில் சூரியனை ஆண்பாலில் அழைப்பதா அல்லது பெண்பாலில் அழைப்பதா என்று முடிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகே அதை வாசகத்தில் அமைக்க முடியும்.
ஹீப்ரு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் சூரியனை ஆண்பாலாக அழைக்கிறார்கள்.
** சூரியன் ஒரு கோள், 'அவன்' கிழக்கில் உதிக்கிறான்.
என்று ஹீப்ரு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் வாசகம் அமைக்கப்படுகிறது.
அரபு மொழியில் சூரியனை பெண்பாலில் அழைக்கிறார்கள்.
** சூரியன் ஒரு கோள், 'அவள்' கிழக்கில் உதிக்கிறாள்.
என்று அரபு மொழியில் வாசகம் அமைக்கப்படுகிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்...
¶¶ ஆணுறுப்பு கொண்டிருக்கும் ஓர் ஆணை 'அவன்' என்று ஆண்பாலில் அழைப்பதுபோன்ற அர்த்தத்தில் சூரியனை 'அவன்' என்று அழைக்கவில்லை.
¶¶ பெண்ணுறுப்பு கொண்டிருக்கும் ஓர் பெண்ணை 'அவள்' என்று பெண்பாலில் அழைப்பதுபோன்ற அர்த்தத்தில் சூரியனை 'அவள்' என்று அழைக்கவில்லை.
பிறப்புறுப்பின் அடிப்படையில் ஆண் பெண் என்று பிரிப்பதுபோன்று சூரியனுக்கு பாலினம் கொடுக்கவில்லை.
மனிதர் அல்லாதவற்றைக் குறிப்பிடுவதற்கு தனியாக வார்த்தை இல்லாத மொழிகளில் மனிதருக்கு பயன்படுத்தப்படும் இலக்கணத்தையே அவற்றிற்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
மனிதர் அல்லாத ஒன்றை ஆண்பாலில் அழைப்பதா அல்லது பெண்பாலில் அழைப்பதா என்பதை அந்ததந்த மொழிகளின் இலக்கணம் முடிவு செய்துகொள்கிறதே தவிர அவற்றின் பாலினம் இதுதான் என்று எந்த வரையறையும் இல்லை.
சந்திரனை ஆண்பாலில் அழைப்பது அரபு இலக்கணம். இதை பெண்பாலில் அழைப்பது ஹீப்ரு மற்றும் பிரெஞ்ச் மொழிகளின் இலக்கணம்.
** எல்லா மொழிகளிலுமே மனிதர் மட்டுமே உயர்திணை. ஏனென்றால் மனிதர் பகுத்தறிவு கொண்டவர்.
** மனிதர் அல்லாத அனைத்துமே அஃறிணை. ஏனென்றால், மனிதரல்லாதவற்றிற்கு மனிதனின்பகுத்தறிவு இல்லை.
** அஃறிணையை குறிக்க தனி வார்த்தை இருக்கும் மொழிகளில் இதை வேறுபடுத்த முடியும்.
** அஃறிணையை குறிக்க தனி வார்த்தை இல்லாத மொழிகளில் மனிதருக்கு பயன்படுத்தப்படும் உயர்திணை வார்த்தையே கொடுக்கப்படும்.
** மனிதருக்கு தரப்படும் உயர்திணை வார்த்தையால் அஃறிணையை
அழைத்தாலும் அது மனிதரின் உயர்திணைக்கு சமமில்லை. அது தாழ்ந்ததாகவே கருதப்படும்.
அதாவது, சூரியனை 'அவன்' என்று பாலினம் கொடுத்து அழைத்தாலும் அது மனிதனை 'அவன்' என்று அழைப்பதற்கு சமமானதல்ல.
நம்பிக்கை சார்ந்தவையும் இதுபோன்று பாலினம் கொடுத்து அழைக்கப்படுகிறது.
வானுலக நம்பிக்கையான தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் அஃறிணையாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், இவை மனிதனை விட அதிக ஆற்றல் பெற்றவையாக கருதப்படுகிறது.
இவற்றை எப்படி அழைப்பது?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.