Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -8)

"ஷியா" எனும் கூட்டத்தினர் பிற  முஸ்லிம் குழுக்களைப் போல் ஒரு குழுவினர்தானே தவிர அவர்களை காபிர் என்று சொல்லக்கூடாது என்பது இம்ரான் ஹுஸைனின் அடுத்த சேட்டை. இதை பார்ப்போம். 

ஷூஃபி, தரீக்கா, பரலேவி, தேவ்பந்தி, மத்ஹபு, தர்ஹா, தாயத்து, சூனியம், ஸலபி, தவ்ஹீது என பலகொள்கையுடையவர்களும் "அஹ்லே சுன்னா" எனப்படும் மிகப்பெரிய முஸ்லிம் சமூகமான "சன்னி" என்ற பிரிவுக்குள் தங்களை அடக்கிக்கொள்கின்றனர். இவர்கள்தான் "சன்னி முஸ்லிம்கள்" என்று பரவலாக அறியப்படுகிறது. 

இவர்களுள் ஒருவரை ஒருவர் காபிர் என்று அழைப்பதை தவிர்த்துக்கொள்கின்றனர். அதாவது, ஒருவரின் பார்வையில் மற்றொருவர் தவறான கொள்கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாலும் எதிர்க்கொள்கையுடையவர்களை காபிர் என்று அழைப்பதை தவிர்க்கின்றனர். 

கலிமா சொன்னவர்கள் எந்த கொள்கையில் இருந்தாலும் அவர்களின் கொள்கை காரணமாக காபிர் என்று அழைத்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் இதற்குக் காரணம். 

ஆனால், வழிகெட்டவர்களாகக் கருதும் கூட்டத்தினரை தங்களுடைய வட்டத்திலிருந்து "சன்னி முஸ்லிம்கள்" வெளியேற்றி வைத்துவிடுவர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட கூட்டத்தினரை  காபிர் என்று அழைக்காவிட்டாலும் அந்த கூட்டத்தினரை காபிரான கூட்டமாகவே கருதுவர். 

அவர்களை காபிர் என்று பகிரங்கமாக அழைப்பதில் சன்னி முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இருக்கிறது. அவர்களை காபிர் என்று அழைக்க வேண்டாம் என்று சில சன்னி முஸ்லிம்கள் நல்ல எண்ணத்தில் கூறுகின்றனர். அத்தகைய நல்ல எண்ணத்தில் ஷியாவை காபிர் என்று அழைக்க வேண்டாம் என்று இம்ரான் ஹுஸைன் கூறியிருந்தால் நமக்கும் அதில் மாற்றுக்கருத்தில்லை. கலிமா சொன்ன எவரையும் அவருடைய கொள்கை காரணமாக காபிர் என்று அழைக்க வேண்டாம் என்பதில் நமக்கும் உடன்பாடுதான். 

ஆனால், இம்ரான் ஹுஸைன் அதற்கு வைக்கும் வாதம்தான் அவருடைய ஆய்வின் தரமற்ற தன்மையைக் காட்டுகிறது. 

"ஹஜ் என்பது முஸ்லிம்கள் செய்வது, ஷியாக்களும் ஹஜ் செய்கிறார்கள், அப்படியென்றால் ஷியாக்களும் முஸ்லிம்கள்தானே!" என்ற வாதத்தை முன்வைக்கிறார் இம்ரான் ஹுஸைன். 

அதாவது, ஷியாக்கள் முஸ்லிம் என்பதற்கான அளவுகோளாக இம்ரான் ஹுஸைன் முன்வைப்பது ஹஜ் செய்வதைத்தான்.

முஸ்லிம்கள்தான் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது உண்மைதான்...

"நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது..." (9:28) என்ற வசனம் இறங்கிய அந்த ஆண்டிற்குப்பிறகு காபிர்கள் காபாவை சுற்ற (ஹஜ் மற்றும் உம்ரா செய்ய) அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் மட்டும்தான் காபாவை வலம் வர அனுமதிக்கப்பட்டனர். 

இதனடிப்படையில்தான், ஹஜ் செய்ய அனுமதிக்கப்படும் ஷியாவினரும் முஸ்லிம்கள்தான் என்ற வாதத்தை முன்வைக்கிறார் இம்ரான் ஹுஸைன். 

வேதங்களில் இருந்து எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் எஸ்காடலஜி (eschatology) எனும் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலம் கியாமத் நாளை கணக்கிட்டு இன்னும் சில வருடங்களில் நாம் அழியப்போகிறோம் என்று எதிர்காலத்தை ஆரூடம் சொல்லும் இம்ரான் ஹுஸைன், இறந்தகால வரலாற்றை பார்க்கத் தவறிவிட்டார். 

ஹஜ் என்பது மக்காவில் செய்யப்படுவது. மக்காவில் உள்ள நிர்வாகிகளால் நடத்தப்படுவது.

இஸ்லாமிய ஆட்சியின் தலைமை மதினாவில் இருந்து செயல்பட்டது. மதினாவோ அரசியல் குழப்பம் நிறைந்த ஒன்றாக இருந்தது. 

நபி(ஸல்) அவர்கள் இறந்ததில் இருந்து அதிகார சர்ச்சை மதினாவில் ஆரம்பமாகியது. மதினாவாசிகளில் இருந்து ஒருவரும் மக்காவாசிகளில் இருந்து ஒருவருமாக இரண்டு நபர்கள் சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியை நடத்துவது என்ற யோசனை மதினாவாசிகளால் எழுப்பப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. 

அபுபக்கர்(ரலி) அவர்கள் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அபுபக்கர்(ரலி) அவர்கள் இறக்கும் தருவாயில் உமர்(ரலி) அவர்களை கலீபாவாக அறிவித்தார். உமர்(ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குபோராடிய நிலையில் ஆறுநபர்கள் கொண்ட குழுவை அமைத்து அடுத்த கலீபாவை தேர்வு செய்யச் சொன்னார். 

அந்த ஆறுநபர்களுள் இறுதியாக உஸ்மான்(ரலி) மற்றும் அலி(ரலி) ஆகிய இருவர் மட்டுமே கலீபா எனும் சுமையை சுமக்க சம்மதித்தார்கள். அவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில் உஸ்மான்(ரலி) அவர்கள் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அலி(ரலி) அவர்கள் உடனடியாக உஸ்மான்(ரலி) அவர்களிடம் மகிழ்ச்சியாகவே பைஅத் செய்துகொடுத்தார். 

ஆனால், அலி(ரலி) அவர்கள் கலீபாவாக வரவேண்டும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. 

ஒருகட்டத்தில் உஸ்மான்(ரலி) அவர்கள் ஒரு கலகத்தின் மூலம்  கொல்லப்பட்டார். குழப்பம் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அலி(ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பேற்கிறார். உஸ்மான்(ரலி) அவர்களை கொன்றவர்களை பழி தீர்ப்பதைவிட குழப்பத்தை சரிசெய்வதே முதன்மையான வேலையாக அலி(ரலி) கருதினார். ஆயினும் அதுவே பெருங்குழப்பத்திற்கு அடித்தளமிட்டது. உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்கு அலி(ரலி)  ஒரு காரணகர்த்தா என்று பொய்யுரையும் பரப்பப்பட்டது. 

குழப்பம் அதிகரித்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தலைமையில் ஒரு படையும், அலி(ரலி) அவர்கள் தலைமையில் ஒரு படையும் மோதிக்கொண்டன. 
இதுதான் "ஒட்டகப்போர்" என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. 

இறுதியில், இருதரப்பிலும் ஒரு நடுவர் நியமிக்கப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. நடுவர்களின் தீர்ப்பை இருதரப்பும் ஏற்றது. தீர்ப்பளிப்பவன் அல்லாஹ்தான் என்றும் நடுவர் அல்ல என்று ஒரு புதுக்கூட்டம் கிளம்பியது. 

இந்த கூட்டமும் உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலையில் பங்காற்றியது என்றும் அதை மறைக்கவே அலி(ரலி) அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்தார்கள் என்றும் கூறப்பட்டது. இவர்கள்தான் காரிஜியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

இப்போது மக்காவுக்கு வருவோம். 

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு முஸ்லிம்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிலையில், மக்கா நிர்வாகிகள் மேற்கண்டவர்களுள் எவரை அனுமதித்து எவரை தடுக்க வேண்டும்? 

** கலிபாவை எதிர்த்து போரிட்ட ஆயிஷா(ரலி) அவர்களின் தரப்பினர் ஹஜ் செய்வதை அனுமதிக்க வேண்டுமா அல்லது தடுக்க வேண்டுமா? 

** முஸ்லிம்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களை எதிர்த்துப் போரிட்ட அலி(ரலி) அவர்களின் தரப்பினர் ஹஜ் செய்வதை அனுமதிக்க வேண்டுமா அல்லது தடுக்க வேண்டுமா? 

** தீர்ப்பளிப்பவன் அல்லாஹ்தான் என்று திருமறை வசனங்களை ஓதி இரண்டு தரப்பினைரையும் எதிர்த்த காரியாஜியாக்கள் ஹஜ் செய்வதை அனுமதிக்க வேண்டுமா அல்லது தடுக்க வேண்டுமா? 

மக்காவின் நிர்வாகிகள் ஹஜ் செய்ய வரும் எவரையும் தடுக்கவில்லை. 
கலிமா சொன்ன ஒருவர் முஸ்லிம் என்ற அடிப்படையில் அனைவரையும் அனுமதித்தனர். 

காரிஜியாக்களும் ஹஜ் செய்தனர். காரிஜியாக்கள் ஹஜ் செய்தார்கள் என்பதால் அவர்களையும் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் கொண்டுவருவாரா இம்ரான் ஹுஸைன்? 

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலில் வழிகெட்ட கூட்டமாக ஆனவர்கள் இந்த காரிஜியாக்கள். 

இவர்களுக்கு அடுத்து வழிகெட்டவர்கள்தான் இந்த "ஷியா" கூட்டத்தினர். ஆரம்பத்தில்  "அஹ்லுல் பைத்" என்ற மென்மையான போக்கை கையாண்டார்கள் இந்த ஷியாக்கள். 

போகப் போக அவர்களின் வழிகேடு அதிகரிக்கத் தொடங்கியது. அலி(ரலி) அவர்களை அளவுக்கதிகமாக புகழ ஆரம்பித்தனர். அலி(ரலி) அவர்களை எதிர்த்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் போர் செய்ததால் அன்னையின் மீது களங்கம் கற்பிக்கத் தொடங்கினர். 

மூன்று கலிபாக்களை ஏற்க மறுத்து நான்காவது கலிபாவான அலி(ரலி) தான் முதல் கலிபா என்றனர். 

இந்த ஷியாக்களின் வழிகேடு எழுதிமாளாது. 

வழிகெட்ட காரிஜியாக்கள் ஹஜ் செய்ததுபோல் வழிகெட்ட ஷியாக்களும் ஹஜ் செய்கின்றனர். 

முஸ்லிம்களுள் வழிகெட்டவர்கள் ஹஜ் செய்வது ஆரம்பகாலத்தில் இருந்தே தடுக்கப்படவில்லை. 

வழிகெட்ட முஃதஸிலாக்கள் ஹஜ் செய்தனர்.

வழிகெட்ட காதியானிகள் ஹஜ் செய்ய முடியும். 

வழிகெட்ட பத்தொன்பது கூட்டத்தினர் ஹஜ் செய்ய முடியும். 

வழிகெட்ட அஹ்லே குர்ஆன் (குர்ஆன் மட்டும்) கூட்டமும் ஹஜ் செய்ய முடியும். 

கியாமத் நாள்வரைக்கும் வரக்கூடிய காலங்களில் இன்னும் எத்தனை வழிகெட்ட கூட்டங்கள் உருவாகுமோ அத்தனை கூட்டமும் ஹஜ் செய்ய முடியும். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஹஜ் நிகழ்வை தஜ்ஜால் தன்னுடைய  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான் என்று கூறி தான் ஹஜ்ஜிற்கு செல்லமாட்டேன் என்று கூறும் இம்ரான் ஹுஸைன், ஹஜ் செய்வதை அளவுகோலாக வைத்து ஷியாக்களை முஸ்லிம்களின் வட்டத்திற்குள் கொண்டுவர முயல்வதுதான் உச்சகட்ட வேடிக்கை. 

மனோதத்துவ ரீதியிலான வாதங்களை முன்வைத்து மனரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் இம்ரான் ஹுஸைன் ஒரு வாழும் தஜ்ஜால். இந்த தஜ்ஜால் நீரோடையாக காட்டுவதை நம்பி சூப்பர் முஸ்லிம் சேனல் அதில் விழுந்துவிட்டது. தஜ்ஜால் காட்டும் நீரோடை நெருப்பு ஆறாகத்தான் இருக்கும். 

வாழும் தஜ்ஜால் இம்ரான் ஹுஸைனின் நெருப்பு ஆற்றில் 
விழுந்து விட்ட சூப்பர் முஸ்லிம் சேனல் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்தது எப்படி என்பதைப் பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Part -9
https://piraimeeran.blogspot.com/2020/07/SM9.html?m=1

Part -7

https://piraimeeran.blogspot.com/2020/07/SM7.html?m=1

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி